Saturday 17 January 2015

ஞாநியின் கையில் எத்தனை பலூன்கள்

அதிகாரப் போக்கிற்கு எதிரான கலவரத்தை கத்தியைக் கொண்டோ; இல்லை கத்திக்கொண்டோதான் செய்ய வேண்டும் என்றில்லை பலூனை கையில் எடுத்துக்கொண்டு ஊர்வலம் செல்வதன் மூலம் கூட செய்யலாம் என்ற ஒரு வரியின் தொடர்ச்சிதான் இந்த நாடகம்.

அதிகாரம் எப்போதும் தனக்கு பயப்படாதவர்களை கண்டுதான் அதிகம் பயப்படுகிறது. அவர்களை ஆரம்பத்திலேயே பயமுறுத்தி உட்கார வைக்கப் பார்க்கிறது. அவர்கள் உட்காராமல் எழுந்து நின்று பேசினால் அது இப்படித்தான் இருக்கும் என்கிறது பலூன் நாடகம்.

நாடகத்தில் வரும் கோர்ட் காட்சிகளை இப்போது நடப்பதாக நினைத்துப் பார்த்தால் கூட கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் 1981 ல் இது எழுதப்பட்டுள்ளது என்பதை நினைக்கும்போது ஞாநியின் “தில்”லை நினைத்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

ஓ பக்கங்கள் நினைவில் வந்ததும் எனக்கு ஒரு சினிமா வசனமும் கூடவே வந்தது... “சார் அப்பவே அப்படி. இப்ப கேட்கவா வேணும்”.

புத்தகத்தின் அட்டையில் பெயர்கள் பழைய புத்தகத்திலிருந்து அப்படியே ஸ்கேன் செய்திருப்பதால் தெளிவற்று இருக்கிறது. அட்டை வடிவமைப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நாடக உரையாடல்களில் வரும் வரிகள் எங்கேயிருந்து எடுத்தாளப்படுகிறது என்பதை அந்தந்த பக்கத்திலேயே கொடுத்திருக்கலாம். வரிகளால் ஈர்க்கப்படும்போது ஒவ்வொரு முறையும் கடைசிப்பக்கத்திற்கு ஒட வேண்டியிருக்கிறது.

இந்த தேசத்தில ஏராளமான பேரு கோவணத்தோட இருக்கிறப்ப நீங்க எல்லோரும் புல்லா டிரஸ் பண்ணீட்டிருக்கிறதுதான் ஆபாசம் என்ற வரிகளை நாடகத்தின் போக்கில் படிக்கும்போது உங்களுக்கு கைத் தட்ட தோன்றும். அப்படி தோன்றினால் புத்தகத்தை வைத்து விட்டு அதை செய்து விடுங்கள். ஒரு படைப்பாளிக்கு வேறு எப்படி மரியாதை செய்வது?

நாடகத்தின் வெற்றியில் பேசுகிற சொற்களைப்போலவே பேசாத சொற்களுக்கும் பங்கு இருக்கிறது. இந்த நாடகத்திலும் கூட எழுதப்பட்ட சொற்களை போலவே எழுதப்படாத சொற்களும் நம்மிடம் பேசுகின்றன. அதை நம்மை பேசச் சொல்லி பேசுகின்றன.

ன்னதான் அவசரமாக புத்தகத்தை தயாரித்தாலும் சபாபதியை சாபதி என்று போடுகிற அளவுக்கு எழுத்துப்பிழைகளை அனுமதித்திருக்கக்கூடாது.

இந்தப் புத்தகத்தில் இரண்டாம் பாகம் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஏன் தேவைப்படுகிறது என்ற விளக்கத்தோடு. அடுத்தடுத்த பதிப்புகளில் புதிதாக ஏதாவது சில பகுதிகளை சேர்க்க வேண்டி வரலாம். ஒவ்வொரு முறையும் அதை தெரிந்து கொள்ள புத்தகம் வாங்க முடியாது. எனவே அந்தப்பகுதிகளை இணையத்தில் வெளியிடலாம். ஏற்கனவே புத்தகம் வைத்துள்ளவர்களுக்கு அது பயன்படும்

நான் ஒருத்தன் கத்தி என்ன ஆகப்போகிறது?’ என்கிற அவநம்பிக்கைகளுக்கு மத்தியில், “நான் ஒருத்தனும் குரல் கொடுக்கவில்லை என்றால் என்ன வேண்டுமானாலும் ஆகலாம்” என்கிற அக்கறைதான் ஞாநியின் குரல், அவரது பேச்சு, எழுத்து, நாடகம் எல்லாமே.

தன்னுடைய கருத்துக்களை கடைபிடிப்பதில்தான் கறார் பேர்வழியே தவிர மனிதர்களை நேசிப்பதில் கனிவான பேர்வழிதான்.

கருத்தைச்சுதந்திரமாக முன்வைப்பதற்கு ஞாநி கொடுக்கிற முன்னுரிமை மிகவும் மதிக்கத்தக்கது. மாற்று கருத்துக்களை முழுமையாக பேசவிட்டு அதைப்பற்றிய தன் கருத்தை தெளிவாக முன் வைக்கிற ஞாநிதான் இந்த கருத்தை கையாள தகுதியானவர்.

பலூன் நாடக ஆசிரியராக நாடகத்தில் வரும் ஜீவா பேசுகிற வரிகள் ஞாநியின் குரலிலேயே என்னுள் ஒளிக்கிறது, “ நெறைய்ய எழுதணும்தான் நான்தான் எழுதணும்னு இல்லே. எல்லோரும் எழுதலாம்.”

முப்பது ஆண்டுகளில் பலூன் புத்தகத்தின் நான்காவது பதிப்பு இது. ஒவ்வொரு பதிப்பிலும் இறுதியில் இந்த வாசகம் தவறாது இடம் பெறுகிறது..  “அடுத்த பத்தாண்டுகளுக்குப் பின்னர் பலூன் இன்னொரு பதிப்போ இன்னொரு பாகமோ வரத் தேவையற்ற சூழல் உருவாக விரும்புகிறேன்.


இந்த நம்பிக்கையோடு நாமும் சேர்ந்து கொண்டால் நிச்சயம் இதனை சாத்தியமாக்கலாம்.

No comments:

Post a Comment