Sunday 25 January 2015

ஆயிஷா நடராஜன் எனும் குரு வாசகன்

கல்வி ஆர்வலர்களின் மத்தியில் மரியாதைக்குரிய பெயர் ஆயிஷா இரா.நடராஜன்.

ஐந்து வருடங்களுக்கு முன் ஏதேச்சையாக கிடைத்த ஆயிஷா புத்தகத்தை ஒரு திருமண மண்டபத்தில் உணவுக்காக காத்திருந்த நேரத்தில் படிக்கத் தொடங்கினேன்.

படிக்க படிக்க நான் எங்கே இருக்கிறேன் என்பதையே மறந்து விட்டு ஆயிஷாவின் பக்கத்தில் இருந்து அவள் வாழ்க்கையை பதைபதைப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன்.

படித்து முடித்த பொழுதுதான் தெரிந்தது நான் கண்ணீர் வழிய உட்கார்ந்திருக்கிறேன். அடக்க முடியாமல் சிந்திக்கொண்டிருக்கும் கண்ணீரை யாரும் பார்த்து விடக்கூடாது என்பதற்காக நிமிராமலே நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

அதற்கு பிறகு ஆயிஷா நடராஜன் அவர்களின் அத்தனை புத்தகங்களும் என் மனதிற்குள்ளும் என் அலமாரிக்குள்ளும் புகுந்து கொண்டன.

ஆயிஷாவை படித்து விட்டு குறைந்த பட்சம் ஆயிரம் ஆசிரியர்களிடமாவது அதைப்பற்றி பேசியிருப்பேன். ஒரு நல்ல புத்தகம் இப்படித்தான் நம்மை செயல்பட வைக்கும்.

அதேதான் நடந்திருக்கிறது ஆயிஷா நடராஜனுக்கும் .தான் படித்த சிறந்த புத்தகங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற தவிப்பில் பிறந்ததுதான் இந்த அயல் மொழி அலமாரி புத்தகம்.

அவர் அலமாரியில் உள்ள அயல் மொழி புத்தகங்களை நமக்கு ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்துகிறார். நிச்சயம் அந்தப் புத்தகம் நம் அலமாரியிலும் ஏறும் விதமாக. வாசிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் அள்ளி அணைத்துக்கொள்ளும் புத்தகங்களை அழகாக அறிமுகப்படுத்துகிறார்.

நாம் மீனை பார்த்து ரசிப்பதற்கு ஏதுவாக மட்டுமல்ல மீன் நம்மை பார்த்து ரசிப்பதற்கு ஏதுவாக அது வட்ட கண்ணாடிக் குவளையில் வளர்ப்பது தடை செய்யப்படுகிறது ( அத்தகைய அமைப்பில் மீனுக்கு நாம் விகாரமாக தெரிவோம் என்பதால் ) என்பதை படிக்கிறபோது ஆச்சரியமாக இருக்கிறது.

100 வித புத்தகங்களை வாசித்து முடித்தபோது கிடைக்கிற மகிழ்ச்சியை இந்த ஒரு புத்தகம் தந்துவிடுகிறது. 100 புத்தகங்களின் வாசிப்பு அனுவத்தை ஒரு புத்தகத்திலேயே ஏற்படுத்தியதற்காக நன்றி, நடராஜன் அவர்களுக்கு.

ஒரு புத்தகத்தை பற்றி பேசும்போது அதன் சிறப்பை சொல்வதற்காக அதே போல வந்துள்ள ஒரு பத்து புத்தகங்களையாவது ஒப்பிட்டுவிடுகிறார். வேறு வேலையே இல்லாமல் புத்தகங்களை மட்டுமே படித்துக்கொண்டிருந்தால் கூட இவ்வளவு புத்தகங்களை படித்திருக்க முடியுமா? என்று தெரியவில்லை.

ஒரு கல்வி நிறுவனத்தில் முதல்வராக இருந்துகொண்டு கல்விச்சார்ந்த செயல்பாடுகளில் இருந்துகொண்டு நிறைய புத்தகங்களை எழுதிக்கொண்டு இத்தனைக்கும் நடுவில் நிறைய வாசித்துக்கொண்டும் இருப்பதால் இவரை விடச்சிறந்த முன்மாதிரி, மாணவர்களுக்கு கிடைத்துவிட மாட்டார்கள்.

கணிதப்பிசாசுகள் என்ற தலைப்பில் உள்ள நூல் அறிமுகங்கள் நம்மை கணித காதலராக்குகிறது. புத்தகம் பிரிப்போம் சிறகை விரிப்போம் எல்லோரையும் தேச நேசராக்குகிறது.

யுத்தக்காலத்தில் எழுதப்பட்ட 13 குழந்தைகளின் டைரி தொகுப்பு ‘ஸ்டோலன் வாய்சஸ்.’ யுத்தங்களால் பாதிக்கப்பட்ட சிறுமி எழுதுகிறாள், “எல்லாம் வல்லவரான கடவுளே... இந்தப் பெரிய சண்டையில் நீங்கள் யார் பக்கம் இருக்கிறீர்கள் எனபதைப் பலரும் விவாதிக்கிறார்கள்.. நீங்கள் இருக்கிறீர்களா என்பதே எனக்கு கேள்விக்குறியாக இருக்கிறது.” 

குரு வாசகன்

வாசிக்காத ஆசிரியர்களை பில்லி ஹாப்கின்ஸ் தனது ஹை ஹோப்ஸ் நாவலில் மலட்டு மாமிச கோழிகள் என்று அழைக்கிறார்.   தனது துறை சார்ந்து மட்டுமே வாசிப்பவர்கள் மரப் பொந்தின் அணில் போன்றவர்கள்.. மேலேயே வாசித்து வாழ்ந்து விடுவார்கள். இருக்கும் இடத்தில் வந்து சேருவதை வாசிக்கும் ஆசிரியர்கள் கிணற்று மீன்கள் என்கிறார்.

இதில் நீங்கள் யார் ? என்று ஆசிரியர்களிடம் கேட்பதற்காக, ஆயிஷா போலவே இதையும் குறைந்தபட்சம் ஒரு ஐந்தாயிரம் ஆசிரியர்களிடாமவது, இந்தக் கட்டுரையை அச்சிட்டுக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற திட்டம் வைத்துள்ளேன்.

உங்களுக்கு இதயம் இருக்கிறதா? கட்டுரையை படித்து முடிக்கும்போது உங்கள் இதயம் இன்னும் விரிந்து இந்த உலகத்தில் உள்ள அத்தனை மனிதர்களையும் உங்கள் உறாவாக உணர வைக்கிறது.

புத்தகத்தை படித்து முடிக்கும்போது நமக்கு ஏற்படும் பிரமிப்பு இவர் சுவாசித்தபடியே வாழ்ந்தாரா? இல்லை வாசித்தபடியே வாழ்ந்தாரா? என்பதுதான். இப்படி ஒரு வாழ்க்கை நமக்கும் வாய்க்க வேண்டும். அதை நாம்தான் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.


இந்த உணர்வை ஏற்படுத்துவதுதான் இந்த நூலின் வெற்றி.

3 comments:

  1. ஒரு சிறந்த ஆசிரியரால் (நடராசன்) எழுதப்பட்ட, ஒரு சிறந்த நூலுக்கு, சிறந்த ஆசிரியர்களை உருவாக்க முயலும், ஒரு சிறந்த பயிற்றுநரின் (வரதராஜன்) மூலம் கிடைத்த, ஒரு சிறந்த அறிமுகம்..!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி. யோசியில் வெளியிட்டதற்கும் நன்றி.

      Delete
  2. Very good book and every one should read and follow inclusive of parents or elderly people when kids ask question we should not neglect. !!!

    This book is available on Free Tamil ebooks under creative common license on below link
    http://freetamilebooks.com/ebooks/ayesha/

    ReplyDelete