Friday 15 May 2015

36 வயதினிலே ... பெண்கள் அவசியம் பார்க்க வேண்டிய பாடம்


உங்கள் கணவருக்கும் சேர்த்து நீங்களே டிக்கெட் புக் செய்து அழைத்துச் செல்லுங்கள்.  

இல்லாவிட்டாலும் இந்த படம் பார்த்த பிறகு அடுத்த படத்துக்கு நீங்கள் அப்படித்தான் செய்வீர்கள்.


கட் அவுட் கிடையாது. பாலாபிஷேகம் கிடையாது. விசில் சத்தம் இல்லை. பிளாக்கில் யாரும் டிக்கெட் விற்கவில்லை. பேப்பரை கிழித்து யாரும் ஸ்கிரீன் மீது வீசவில்லை. ஆர்ப்பட்டமில்லாமல் அமைதியாக ரீலிஸான அன்று முதல் ஷோ படம் பார்க்க முடிகிறது என்பதற்காகவே ஹிரோயினிசம் கொண்டாடப்பட வேண்டும். 

அரங்கை நிறைத்த பெண்களை பார்த்தாவது  நல்ல சினிமாவுக்கான ஏக்கத்தை மசாலா சினிமா இயக்குநர்கள் புரிந்து கொண்டால் சரி என்று தோன்றுகிறது..



படத்துக்கு வருவோம்.

வாழ்க்கையில் ஆயாசம் அடைகிற ஒரு பெண்ணின் 36 வயதில் தொடங்கி சாதிப்பதற்கு வயது ஒரு பொருட்டே இல்லை என்ற நிலையை எய்துவதை சொல்வதே படத்தின் கதை.

சமையல், குழந்தைகள், கணவன், வீட்டின் பற்றாக்குறைக்காக வேலை என வீடே உலகமாக இருக்கும் மனைவியை உலகமே வீடாக இருக்கிற கணவன் நடத்துகிற விதமும் மனைவி தன் உலகத்தை மீட்டெக்கிற விதமும் கவித்துவமாக பதிவாகியிருப்பதால் ஜோதிகாவிற்கு இது ஒரு அர்த்தமுள்ள ரீ என்ட்ரீ.

எந்தவித நாயகி அம்சமும் இல்லாமல் சீரியல் பார்க்க ஒடுவது, சீட்டில் இடம் பிடிக்க பாட்டியை ஏமாற்றி எழுப்பி விடுவது, வம்பு பேசுவது, உடன் வேலை பார்க்கும் பெண்ணின் வயிற்றெரிச்சலை கிளப்பி விடுவது என நம்ம பக்கத்து வீட்டு பெண் (நம்ம வீட்டு பெண் என்று சொன்னால் அடி விழும்)  பாத்திரத்தில் ஜோதிகா அழகாக அசத்தியிருக்கிறார். 

"இன்னொரு வசந்தி இந்த வீட்டில் உருவாகிவிடக்கூடாது" என்று நினைக்கிற கணவர்கள் 'வசந்தியை நாம்தான் இப்படி வைத்திருக்கிறோம்' என்று உணர்வதில்லை.  இதை உணர்த்துகிற ரகுமானின் அண்டர் ப்ளே நடிப்புக்கு தனியாக ஒரு பொக்கே கொடுக்கலாம். 

'நா வேலையா இருக்கேன். பத்து நிமிடம் கழித்து பேசுகிறேன்' என்று சொன்னதற்காக மணி கணக்கில் காத்திருக்கும் மனைவியை,  இரண்டு நாள் கையிலே பிடிக்க முடியவில்லை என்றால் இந்த ஆண்கள் முகம் எப்படி இருக்கும் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வீடுகளை எல்லாம் உயிருள்ளவர்களுக்கான கல்லறையாக வைத்திருக்கிறோம் என்பதை ஜோதிகா பேசும்விதம் ஒரு ஹைக்கூ கவிதை.

36-vayathinile-movie-release-posters01
படம் முடிந்ததும் வசனம் யார் என்று க்ளிப்போர்டை வந்து பார்க்க வைத்த விஜிக்கு பெண்களின் சார்பாக ஒரு சல்யூட். 

"நம்ம மக்கள் விஷத்தை பார்த்து பயப்பட மாட்டாங்க. விலைய பார்த்துதான் பயப்படுவாங்க.. ஏழைக்கு ஒரு தக்காளி பணக்காரனுக்கு ஒரு தக்காளின்னு இங்க எதுவும் கிடையாது.."  

"பிரசவத்தை விட பெரிய வலி ஒரு கணவன் மனைவியை அவமானப்படுத்தறதுதான்."

"உன்னை தொலைச்சிடாத உன் கனவும் தொலைஞ்சிடும்" என எல்லாமே நச்..

"எல்லாத்தையும் விமர்சனம் பண்றதுதான் அறிவுன்னு ஒரு தவறான தலைமுறை நாங்க உருவாக்கிவிட்டோம்" என்று பேசுகிற பக்கத்து வீட்டு ஆசிரியர் தொடங்கி "இந்த தலைமுறைக்கு ருசியே தெரியாது" என்று பேசுகிற சமையல் கலைஞர் வரை பலரும் அழகான பன்ச் வைப்பது படத்தை தொடர்ந்து சுவாரஸ்யமாக வைத்திருக்கிறது. 

பேஸ் புக்கில் எதையும் கலாய்க்கும் மன நிலையை பேஸ் புக்கை வைத்தே ஜாலியாக கலாய்கிறார்கள்.

தேவைப்படும் நேரத்தில் கண்ணில் மட்டும் நடிக்கும் ஜோதிகாவிற்கு வாடி ராசாத்தி என்று ஆரத்தி எடுக்க வேண்டிய படம்தான். 

குடும்பத்தை உருவாக்கிற தியாகத்தில் தங்களை தொலைத்துவிட வேண்டிய தில்லை என்பதே பெண்கள்  உணர வேண்டிய பாடம்

வசந்தியை மீட்டெடுக்கும் நட்பான சூசன்களாக கணவர்களே அமைந்துவிட்டால்.. அது எப்படி இருக்கும் என்பதற்கு கீழே இருக்கும் படமே சாட்சி.. 

இந்தப்படத்தை சூர்யா தயாரித்ததே படத்தில் உள்ள பாடத்தை எப்படி பின்பற்ற வேண்டும் என்று சமூகத்திற்கு சொல்லும் மிக முக்கிய செய்தியாக கருதுகிறேன்.

மறு வருகைக்கு ஜோதிகாவிற்கு வரவேற்பும் வாழ்த்துக்களும்..

2 comments:

  1. வீடுகளை எல்லாம் உயிருள்ளவர்களுக்கான கல்லறையாக வைத்திருக்கிறோம்
    உண்மை உண்மை

    ReplyDelete